கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு மகாராஷ்டிர அரசு நிறுவனம் ரூ. 400 கோடி உதவி!
கிங்பிஷர் நேற்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில், கடந்த மூன்று மாதங்களில் (ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர்) மட்டும் ரூ. 469 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் சரிந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நஷ்டம் ரூ. 231 கோடியாக இருந்ததாகவும், அது இந்த ஆண்டு இரண்டு மடங்காகிவிட்டதாகவும், இதற்கு முக்கிய காரணம் விமான எரிபொருள் விலை உயர்வே என்றும் கிங்பிஷர் தெரிவித்துள்ளது.
கடந்த காலாண்டு காலத்தில் மட்டும் எரிபொருளின் விலை 70 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, ரூ. 817 கோடி செலவு வைத்துவிட்டதாகவும் அந்த நி்றுவனம் கூறியுள்ளது.
இந் நிலையில், இந்த நிறுவனத்தின் கிங்பிஷருடன் தொடர்புடைய 4 நிறுவனங்களுக்கு Sicom நிறுவனம் ரூ. 400 கோடி கடன் வழங்கியுள்ளது. இந்த Sicom நிறுவனத்தில் மகாராஷ்டிர அரசுக்கு 49 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் எரிபொருளுக்கான கட்டணத்தை செலுத்துவது, விமானங்களை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கிங்பிஷர் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. மேலும் நிறுவனத்துக்கு மேலும் கடனுதவி வழங்குமாறும் வங்கிகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனத்தில் ரூ. 2,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ள ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட 13 வங்கிகளின் அதிகாரிகளை சந்தித்து மேலும் கடன் கோரவும் கிங்பிஷர் இயக்குனர்கள் குழு திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில், கிங்பிஷர் தானாகவே ரூ. 800 கோடியளவுக்கு நிதியைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்றும், நஷ்டத்திலிருந்து வெளியே வருவது குறித்து சரியான திட்டத்தை முன் வைக்க வேண்டும் என்றும், அதுவரை கிங்பிஷருக்கு புதிய கடன் ஏதும் தருவதில்லை என்றும் 13 வங்கிகள் முடிவெடுத்துள்ளன.
மேலும், கிங்பிஷருக்கு இனிமேல் வரும் வருவாயை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் இந்த வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே கொடுத்த கடனுக்காக வட்டி மற்றும் அசலை வசூலிப்பதற்காக இந்த முடிவை அந்த வங்கிகள் எடுத்துள்ளன.
இதற்கிடையே மும்பையில் நேற்று கூடிய கிங்பிஷர் இயக்குனர்கள் குழுக் கூட்டம் இன்றும் தொடர்ந்தது.