செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த வாலிபர் பலி
செங்கோட்டை: செங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த வாலிபர் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி பாண்டியன். இவரது மூத்த மகன் காசி என்ற கருணாகரபாண்டியன். இவருக்கு கல் அடைப்பு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு சிறுநீரக கல் அடைப்பு அறுவை சிகிச்சை செய்யவும், அதனுள் உள்ள சதையை நீக்கம் செய்யவும் முடிவு செய்த மருத்துவர்கள் மயக்க மருந்து செலுத்தியுள்ளனர். மயக்க மருந்து செலுத்திய பின்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், திடீரென இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு கூடி விவாதம் செய்தனர்.
தகவல் அறிந்த தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் மருத்துவமனை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் பேசி இறந்தவர் உடலை தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications