ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்- இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை 650-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். நேற்று நள்ளிரவு கச்சதீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கற்களையும், கட்டைகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சகாயம், ஆரோக்கியராஜ் ஆகிய இரு மீனவர்கள் பலத்த காயமடைந்தனர்.
படகுகள் சேதம் மீன்கள் கொள்ளை
விடிய விடிய கனமழை கொட்டிய போதும் இலங்கை கடற்படையினர் விடாது தாக்குதல் நடத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட படகுகளை சேதப்படுத்தியதுடன், வலைகளை அறுத்துவிட்டு மீன்களையும் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மாநில அரசு கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 16 நாட்களில் மட்டும் 5 முறை ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.