ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரோசய்யா உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ராகிங் சம்பவங்களை தடுக்க, மாநில அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தலைவராக மாநில ஆளுநர் ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் மாநில ராகிங் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஆளுநர் ரோசய்யா தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உயர் கல்வித் துறை செயலாளர் கண்ணன், உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா கூறியதாவது,
பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளின்படி ராகிங் தடுப்புக் குழு கண்காணிப்பில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகிங் தொடர்பாக புகார்கள் மீது விசாரணை நடத்தி ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான், மற்ற மாணவர்கள் பயம் இல்லாமல் இருக்க முடியும். கல்வி நிறுவனங்களில் ராகிங் சம்பவங்களை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை ராகிங் தடுப்பு கண்காணிப்பு குழு கண்காணிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications