வெள்ளை மாளிகை மீது துப்பாக்கிச் சூடு!: ஒபாமாவை கொல்ல முயன்றதாக இளைஞர் கைது
கடந்த வெள்ளிகிழமை இரவு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது. வெள்ளை மாளிகை அருகே ஒரு காரை விரட்டிச் சென்ற இன்னொரு காரில் இருந்த நபர் ஏ.கே.-47 துப்பாக்கியால் சுட்டார்.
இதிலிருந்து பாய்ந்த குண்டுகள், வெள்ளை மாளிகையில் ஒரு ஜன்னலைத் தாக்கியது. அந்த ஜன்னல் கண்ணாடிகள் புல்லட் புரூப் செய்யப்பட்டவை என்பதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் சம்பவம் நடந்தபோது அதிபர் ஓபாமாவின் குடும்பம் அமெரிக்காவில் இல்லை. வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டையடுத்து அந்தக் கார்களை விரட்டிச் சென்ற வெள்ளை மாளிகையின் உளவுப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இரவு 10 மணியளவில் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் இருந்து 2 கார்களை உளவுப் பிரிவினரின் கார்கள் லிங்கன் மெமொரியல் வரை விரட்டிக் கொண்டு சென்றன. ஆனால், ஒரு கார் தப்பிவிட இன்னொரு ஹோண்டா சிட்டி காரில் இருந்த வாலிபர், அதை வழியிலேயே விட்டுவிட்டு தப்பினார்.
இந்தக் காரில் இருந்து ஒரு ஏ.கே.-47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஆஸ்கார் ஓர்டேகா ஹெர்னான்டஸ் என்ற வாலிபரை கைது செய்தனர். பென்சில்வேனியா மாகாணத்தின் இன்டியானா பகுதியைச் சேர்ந்த இவர் பிட்ஸ்பர்க் நகரின் இடாஹோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது இவர் மீது அதிபர் ஓபாமாவைக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மிக உயர்ந்த பாதுகாப்பு மிகுந்த வெள்ளை மாளிகை அருகே இந்த சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவத்தையடுத்து வாஷிங்டன் டிசியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகபட்ச நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.