பிரதமர் பதவி: 'பாஜகவின் கேண்டிடேட் அத்வானி தான்'-கட்சிக்குள் பிரச்சனை கிளப்பும் ஜஸ்வந்த் சிங்
அத்வானி பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. இதனால் தான் ஊழலுக்கு எதிராக அவர் நடத்தி வரும் ரத யாத்திரையை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கவில்லை. மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பரிந்துரையால் பாஜக தலைவராக்கப்பட்ட நிதின் கட்காரியும் இந்த யாத்திரையில் பெருமளவில் பங்கேற்வில்லை.
மேலும் இந்த ரத யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என தனது கட்சியின் தலைவர்களுக்கே கட்காரி உத்தரவு போட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
அத்தோடு, யாத்திரையை தொடங்கும் முன்பே பிரதமர் பதவிப் போட்டியில் நான் இல்லை என்று அத்வானியை வெளிப்படையாகவே அறிவிக்கவும் செய்தது ஆர்எஸ்எஸ்.
பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையே பிரதமர் பதவிக்கு முன் நிறுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் விரும்புவதாகவும் தெரிகிறது. மோடியும் இந்த ஆசையில் தான் உள்ளார்.
இந் நிலையில் வழக்கமாகவே ஆர்எஸ்எஸ்சிடம் இருந்து ஒதுங்கி நிற்கும் பாஜக மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங், பிரதமர் பதவிக்கு அத்வானி தான் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் இந்திப் பிரிவுக்கு ஜஸ்வந்த் சிங் அளித்துள்ள பேட்டியில், நாட்டில் விரைவிலேயே இடைத் தேர்தல் வரும். அப்போது அத்வானியைத் தான் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்த வேண்டும் என்பதில் பாஜகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அத்வானி தான் எங்களது மூத்த தலைவர், அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பிரதமர் பதவிக்கு அவரையே பாஜக முன் நிறுத்தும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். எனது தனிப்பட்ட விருப்பமும் அது தான் என்றார்.