ஜெயலலிதா பெண்ணாய் இருந்துகொண்டு தாய்மார்களை கண்ணீர் சிந்த வைக்கிறாரே: விஜயகாந்த்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மக்களின் அன்றாட செலவினங்களான பால் மற்றும் பஸ் கட்டண உயர்வை அதிமுக அரசு வரலாறு காணாத வகையில் உயர்த்தி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிமுக அரசை தலைமை தாங்கும் முதலமைச்சரும் ஒரு பெண். அவர் தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு பதில், பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூபாய் 6.25 காசு உயர்த்தி, ஒரு லிட்டர் பாலின் விலை ரூபாய் 17.75 காசில் இருந்து, ரூபாய் 24ஆக உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை கொடுப்பதை தேமுதிக ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி கொடுத்துவிட்டு, மக்களிடம் இருந்து ரூ. 6.25 வசூலித்துக் கொள்வது என்ன நியாயம்? பால் கொள்முதலுக்கு உயர்த்தி வழங்கக்கூடிய 2 ரூபாயை அரசு மானியமாக வழங்கலாம்.
நடுத்தர மற்றும் ஏழை, எளிய, பாமர மக்கள் போக்குவரத்திற்கு அரசு பேருந்துகளைத் தான் நம்பியிருக்கிறார்கள். சுமார் 75 சதவீதம் கட்டண உயர்வை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியது ஆகும்.
மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் எல்லாம் முடங்கிக்கிடக்கின்ற வேளையில் மின்சார ஆணையத்திற்கு மின் கட்டணத்தை உயர்த்த அரசு பரிந்துரைத்து இருப்பதும் கண்டிக்கத்தக்கது.
மக்கள் ஆட்சி மாற்றம் கொண்டு வந்ததே தங்களின் துயரை துடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிந்த கையோடு, மக்கள் விருப்பத்திற்கு மாறாக இந்த அரசு செயல்படுகிறது. இது மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது. எனவே, உயர்த்தப்பட்ட பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications