கட்டண உயர்வு எதிரொலி: இனிமேலாவது பஸ்ஸில் வசதிகள் அதிகரிக்குமா என பயணிகள் எதிர்பார்ப்பு!
சென்னை: கிட்டத்தட்ட ஆம்னி பஸ்களுக்கு இணையான கட்டணத்தை கொண்டு வந்து விட்டது தமிழக அரசு. இனிமேலாவது அரசு பஸ்கள் சிறப்பான முறையில் பயணிகளுக்கு சேவை புரியுமா, குறைந்தபட்சம் மூட்டைப் பூச்சி இல்லாமல் பஸ் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
அரசு பஸ்களுக்கான கட்டண உயர்வு நேற்று அறிவிக்கப்பட்டது. தனியார் பஸ்களுக்கு நிகரான கட்டண உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால் ரயில் கட்டணத்தை விட பஸ் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் இந்த விலை உயர்வுக்கு மத்தியிலும், அரசு பஸ்கள் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றிலும் போய் விடவில்லை. இனி்மேலாவது பயணிகளுக்கு அசவுகரியங்கள் ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பே மக்கள் மத்தியில் நிலவுகிறது.
அல்ட்ராடீலக்ஸ் என்ற பெயரை வைத்துக் கொண்டு படு ஓட்டையான பஸ்களை ஓட்டி வரும் செயலை அரசு நிறுத்த வேண்டும் (சமீபத்தில் சென்னையிலிருந்து இப்படி ஒரு பஸ்ஸை நாகை மாவட்டத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கியது. இதையடுத்து மக்கள் பஸ்ஸை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.)
மூட்டைப் பூச்சித் தொல்லை இல்லாத வகையில் பஸ்களை சுத்தபத்தமாக வைத்துக் கொள்வது.
பஸ்சுக்குள் ஏறியவுடனேயே முடை நாற்றம் வீசும் அளவுக்கு ஆரோக்கியக் குறைவு இருப்பதை மாற்றி சுகந்தமான, ஆரோக்கியமான சூழலுடன் கூடிய பஸ்களை இயக்குவது.
அடிக்கடி விபத்துக்களில் சிக்காமல் பஸ்களை செலுத்துவது, அடிக்கடி பஸ்கள் பழுதடையாமல் பார்த்துக் கொள்வது, பயணிகள் உட்கார்ந்து சவுகரியமாக பயணிப்பதற்கு ஏற்ற சீட் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் எழுந்துள்ளன.
தற்போதைய கட்டண உயர்வுக்குப் பின்னர் அரசு பஸ்களுக்கும், தனியார் ஆம்னி பஸ்களுக்கும் இடையிலான கட்டண வித்தியாயசம் கிட்டத்தட்ட ரூ. 80 என்ற அளவில்தான் உள்ளது. எனவே கட்டண உயர்வுக்குப் பின்னர் பாதி ஆம்னி பஸ்களாக மாறியுள்ளன அரசு பஸ்கள். ஆனால் தனியார் ஆம்னி பஸ்களில் உள்ள வசதிகளில் ஓரளவாவது அரசு பஸ்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.












Click it and Unblock the Notifications