நில அபகரிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஜாமீன்: விரைவில் விடுதலை?
விழுப்புரம்: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் தனக்கு சொந்தமான சிகா அறக்கட்டளைக்காக நில ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பொன்முடி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. பின்பு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அங்கும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது ஜாமீன் மனு நீதிபதி சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொன்முடியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்முடி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பொன்முடிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து பொன்முடி விரைவில் விடுதலையாவார் என திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.