ஜன் லோக்பாலுக்கு ஆதரவு திரட்ட அதிமுக, பாஜக தலைவர்களுடன் அன்னா குழு சந்திப்பு
ஜன் லோக்பால் மசோதாவுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை அன்னா குழு தொடர்ந்து திரட்டி வருகிறது. இன்று அக்குழுவினர் பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லியை அன்னா குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதேபோல அதிமுக தலைவர்களையும் இக்குழுவினர் சந்தித்தனர். லோக் ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானையும் இக்குழுவினர் சந்தித்துப் பேசினர்.
இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியாக வேண்டும்.இல்லாவிட்டால் கூட்டத் தொடர் முடிந்த மறு நாளே, மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவேன் என்று அன்னா ஹஸாரே ஏற்கனவே எச்சரித்துள்ளது நினைவிருக்கலாம்.
முன்னதாக நேற்று அன்னா ஹஸாரே குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், கீழ்மட்ட அரசு ஊழியர்களை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வராமல் நீக்கும் அரசின் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது அன்னா குழு. மேலும், சிபிஐயையும் லோக்பால் வரம்பிலிருந்து விலக்கி வைப்பது என்ற முடிவையும் அன்னா குழு கண்டித்துள்ளது.
இதுகுறித்து அன்னா குழு கூறுகையில், கீழ் மட்ட அரசு ஊழியர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அரசு நம்புவது வினோதமாக உள்ளது. இது சரியல்ல. சி மற்றும் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஊழியர்கள்தான் பெருமளவில் லஞ்சம் வாங்குகின்றனர். அரசின் முக்கிய ஆவணங்களை அபகரிப்பதில் டி பிரிவு ஊழியர்கள் சாமர்த்தியசாலிகள். அதேபோல இன்ஸ்பெக்டர்கள் சி பிரிவில் வருகின்றனர். லஞ்சம் வாங்காத இன்ஸ்பெக்டரை எங்காவது பார்க்க முடியுமா?
இந்தியா முழுவதும் மொத்தம் 60 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இதில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மட்டும் 57 லட்சம் பேர் ஆவர். எனவே இவர்களை கண்டிப்பாக லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அன்னா குழு கூறியுள்ளது.