கைதிகளுக்கு உளவியல் ஆலோசனை தர நிபுணர்கள்- 9 சிறைச்சாலைகளில் நியமனம்
சென்னை: சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்க முதற்கட்டமாக 9 சிறைச்சாலைகளில் உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
சிறைத் துறையின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து, சிறைக்கைதிகளின் நலனுக்கான பல சீர்த்திருத்த திட்டங்களையும், சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
சிறைகளில் நிபுணர்கள்
குற்றவாளிகளின் செயல்களுக்கான காரண காரியங்களை அறிந்து, அவர்களது மனநலம் சம்பந்தமான பிரச்சனைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, அவர்கள் தண்டனை முடிந்து வெளியேறும் பொழுது சமுதாயத்தில் மீண்டும் இணைந்து நாகரிகமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில், ஒரு சிறைச்சாலைக்கு ஒரு பணியிடம் வீதம், சென்னை புழல்-1, கடலூர், கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலுள்ள 6 மத்திய சிறைச்சாலைகளில் நிபுணர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பெண்கள் சிறைச்சாலை
வேலூர், திருச்சிராப்பள்ளி, சென்னை புழல் ஆகிய 3 இடங்களிலுள்ள பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகளில் மூன்று உளவியல் நிபுணர்களும் ஆக மொத்தம் 9 சிறைச்சாலைகளில், 9 உளவியல் நிபுணர் பணியிடங்களை தோற்றுவிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 45 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications