தமிழக பஸ்களைத் தொடர்ந்து கேரள பஸ்களிலும் கட்டணம் அதிகரிப்பு
தென்காசி: தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து தமிழகத்தில் இயக்கப்படும் கேரள அரசு பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் போக்குவரத்து கழகங்கள் டி.எஸ்.எஸ்., எல்.எஸ்.எஸ்., எப்.எஸ்.எஸ்., என்ட் டூ என்ட், பாயிண்ட் டூ பாயிண்ட், 123 என பல்வேறு பெயர்களை வைத்து பஸ்களுக்கு மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தி வசூலித்தன. இந்நிலையில் தமிழக அரசு பஸ் கட்டணத்தை 60 சதவீதம் வரை உயர்த்தியது. இதையடுத்து இதுவரை கட்டணத்தை உயர்த்தாத கேரள அரசும் தமிழகத்துக்கு இயக்கப்படும் பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு ரூ.41, தென்காசியிலிருந்து நெல்லைக்கு ரூ.33, ஆலங்குளத்திலிருந்து நெல்லைக்கு ரூ.18 வசூலிக்கப்படுகிறது. இதே போல் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் கேரள பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கேரள அரசு பஸ்களில் இரு மடங்கு கட்டணம் உயர்த்தியும், தமிழக அரசு பஸ்சை விட ரூ.2, 3 வரை குறைவாக உள்ளது. இந்த கட்டண உயர்வு தமிழக எல்லை பகுதிக்கு மட்டும் தான். கேரள பகுதிகளில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் மாற்றமில்லை.