சேலத்தில் கணித ஆசிரியயை கொல்ல முயன்ற உதவி தலைமை ஆசிரியர் கைது
சேலம்: சேலத்தில் கணித ஆசிரியரை கொலை செய்ய திட்டமிட்ட உதவி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளி மாணவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் முள்ளுவாடியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழ்மணி. இவருக்கும் அதே பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரியும் சசிகலா என்பவருக்கும் இடையே பணி தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர் அப்துல் ஜபார் என்பவர், சேலம் நகர காவல்நிலையத்தில் சனிக்கிழமையன்று புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், ஆசிரியை சசிகலாவை மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யும்படி உதவி ஆசிரியர் தமிழ்மணி தம்மை மிரட்டுவதாக கூறியிருந்தார். கொலை செய்வதற்காக 2 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதாகவும் மாணவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியை சசிகலாவை கொலை செய்ய தமிழ்மணி திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆசிரியர் தமிழ்மணியை கைது செய்த போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.