அன்னிய முதலீட்டுக்கு 'நோ': ஜெயலலிதாவுக்கு சரத்குமார் நன்றி.. நன்றி..!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பார்க்கையில் அன்னிய முதலீடுகள் அவசியமானவையாக கருதப்படும்.
அரசாங்கத்தால் முதலீடு செய்ய இயலாத துறைகளை தேர்ந்தெடுத்து அத்துறையில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதும் வரவேற்பதும் ஏற்றதொரு பொருளாதார கொள்கையாகும்.
ஆனால், சில்லரை வணிகம் என்பது அன்னிய முதலீடுகளுக்கு அவசியமில்லாத துறையாகும்.
ஏற்கனவே இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு சில்லரை வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன. இதற்கே தேசம் முழுவதும் எதிர்ப்பு அலைகள் இருந்து வரும் நிலையில், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டில் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு அல்லாமல் கண்டனத்திற்கு உரிய நடவடிக்கையாகும்.
கடந்த நூற்றாண்டின் இறுதியிலும் சில ஆண்டுகளுக்கு முன்பும் உலகப் பொருளாதாரத்திற்கு சரிவும், தொய்வும் ஏற்பட்ட நிலையில் இந்திய பொருளாதாரத்தை சரிவடையாமல் காப்பாற்றியது இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கக்கூடிய சிறுதொழில்களும், சில்லரை வணிகமும் மிகவும் முக்கியமானவை.
கடினமான, நேர்மையான உழைப்பால் தங்கள் குடும்பம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துபவர்கள் தங்களது சொந்த காலில் நின்று வளரும் சில்லரை வணிகர்கள் தான் என்பதை மறுக்க முடியாது.
எனவே சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இதனடிப்படையில் தமிழக முதல்வர் அவர்கள் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்து இருப்பதை கண்டித்திருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் அத்தகைய முதலீடுகளை முற்றிலுமாக அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபட கூறி லட்சக்கணக்கான சில்லரை வணிகர்களை காப்பாற்றியிருப்பதற்காக லட்சக்கணக்கான சில்லரை வணிகர்களின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications