பழங்குடி பெண்களை கற்பழித்த 4 போலீசாரை கைது செய்ய மாதர் சங்கம் கோரிக்கை
விழுப்புரம்: திருக்கோவிலூரில் பழங்குடி பெண்களை கற்பழித்த போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் என்.அமிர்தம், மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் 4 பேர் போலீசாரால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த செயலுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கின்றது.
இந்த விவாகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டு்ம்.
வாச்சாத்தியில் மலைவாழ் மக்கள் மீது வனத்துறையினர் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர் நடத்திய மனித தன்மையற்ற தாக்குதல் - கற்பழிப்பு கொடூரங்களுக்கு எதிராக சமீபத்தில் தீர்ப்பு வெளியான நிலையிலும் கூட தமிழகத்தில் மீண்டும் போலீசார் இது போன்ற கொடிய செயலில் ஈடுபட்டுள்ளது வேதனை அளிக்கின்றது.
எனவே இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என்று அந்த அறிக்கையில் தெரிவித்தள்ளனர்.