கனிமொழிக்கு ஜாமீன்: அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்-வீரமணி
சென்னை: 2ஜி வழக்கில் கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழி ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளது சட்ட அறிவும், நியாய உணர்வும் உள்ள அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2ஜி வழக்கில் கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமதி கனிமொழி அவர்களும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் அவர்களும் மற்றும் மூவரும், டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர் என்பது, சட்ட அறிவும், நியாய உணர்வும் உள்ள அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.
எத்தகைய பெரிய குற்றமாயினும்கூட, ஒருவரது வழக்கு விசாரணை முற்றாக முடிவடைந்து அவர்கள் தண்டிக்கப்படும் நிலை வந்தால் ஒழிய, அவர் நிரபராதி என்பதே சட்டத்தின் தத்துவம்.
ஆனால் ஏனோ இந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில் நேற்று வரை மறக்கப்பட்ட அம்சமாகவே இது இருந்தது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் ஏற்பட்ட இழப்பு அரசுக்கு வெறும் அனுமானத் தொகைதான்.
இதைத்தான் துவக்கத்திலிருந்தே நாம் விளக்கினோம் தமிழ்நாட்டு மக்களுக்கு.
கனிமொழி மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு அவர் கலைஞர் டி.வி. பங்குதாரர் என்பதால் சரிதானா என்ற வழக்கின் அம்சத்திற்குள் நாம் போக விரும்பவில்லை. அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடக் கூடும். ஆனால் தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்பது நீதியரசர்கள் அறியாத தத்துவம் அல்லவே என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications