இலங்கையில் பல்கலைக் கழகமா? - எஸ்.ஆர்.எம்.குழுமம் விளக்கம்
சென்னை: இலங்கையில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை, என்று அக்குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக பதிவாளர் என்.சேதுராமன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
எங்கள் பல்கலைக் கழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக பல ஆண்டுகளாக இலவசமாக கல்விச் சேவையை ஆற்றுகிறோம்.
இலங்கையில் நலிவுற்ற குடும்பத்தில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு தேவையான சைக்கிள்கள் வழங்கியதுடன், மேலும் பல உதவிகளையும் அவ்வப்போது செய்து வருகின்றோம்.
தமிழினம் ஓங்க வேண்டுமானால் தமிழ் ஓங்க வேண்டும் என்பதை உணர்ந்த நாங்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில், வேறு எந்த பல்கலைக் கழகமும் செய்யாததை, தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் தமிழ்ப் பணிகள் பலவற்றைச் செய்து வருகிறோம். தமிழ் ஆராய்ச்சி, பண்பாடு, கலை போன்ற துறைகளோடு தலைசிறந்த தமிழறிஞர்களுக்கும் தக்க விருதுகளை தமிழ்ப் பேராயத்தின் வழியாக வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில், 'இலங்கையில் எஸ்.ஆர்.எம். குழுமம் பல்கலைக்கழகம் அமைக்கிறது' என்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்குரியது. எங்கள் குழுமம், இலங்கையில் எவ்வித பல்கலைக் கழகத்தையும் அமைக்கவில்லை."
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications