குடும்ப தகராறில் 2 வயது குழந்தையை கொன்று தந்தை தற்கொலை
சங்கரன்கோவில்: சங்கரன் கோவிலில் குடும்பத் தகராறு காரணமாக 2 வயது பெண்குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 3ம் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி முத்தம்மாள் என்ற மனைவியும், ஆதித்யா என்ற 2 வயது குழந்தையும் உள்ளது.
மாரிமுத்துவுக்கு குடிபழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இரு தினங்களுக்கு முன் மாரிமுத்து வழக்கம்போல் குடித்து விட்டு வந்தாராம். இதை முத்தம்மாள் தட்டி கேட்டார். இதில் அவர்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் முத்தம்மாள் குழந்தையை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
விஷம் கொடுத்து கொலை
வீட்டில் தனிமையில் இருந்த மாரிமுத்து மனவேதனை அடைந்தார். இதையடுத்து இரவு மாமியார் வீட்டுக்கு சென்று தனது குழந்தை ஆதித்யாவை அழைத்து வந்தார். பின்னர் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டு படுத்துவிட்டார்.
புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் மாரிமுத்துவின் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தனர். அங்கு மாரிமுத்துவும், ஆதித்யாவும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications