7.5% வளர்ச்சியை எட்டுவோம் என்கிறார் பிரணாப்..6.5 சதவீதமே சந்தேகம் என்கின்றனர் நிபுணர்கள்!
டெல்லி: கடந்த 3 மாதங்களில் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக சரிந்தாலும் இந்த ஆண்டில் 7.5 சதவீத வளர்ச்சியை நாடு நிச்சயம் எட்டியே தீரும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 3 மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. செப்டம்பர் வரையிலான கடந்த 3 மாத காலத்தில், நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் (GDP) வளர்ச்சி 6.9 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 8.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.5 சதவீத வளர்ச்சியை எட்டியது. 2011-2012ல் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சி பெறும் என்று கருதப்பட்ட நிலையில், பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இந் நிலையில், இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் சார்பில் நடக்கும் Leadership Conference மாநாட்டில் பேசிய பிரணாப் முகர்ஜி, கடந்த 3 மாதங்களில் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கலாம். உலக அளவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் வளர்ச்சி நிச்சயம் 7.5 சதவீதத்தை எட்டிப் பிடிக்கும்.
உலக அளவில் நிலவி வரும் பொருளாதார பிரச்சனைகளுக்கு இடையிலும் 7.5 சதவீத வளர்ச்சி என்பது சாதாரணமானதல்ல.
நாட்டில் எல்லா துறைகளிலும் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வரும் அதே நேரத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் முதலீடுகள் கவலை தருகின்றன.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்பது இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியம். நாட்டின் வளர்ச்சிக்கும், உணவு தானிய பாதுகாப்பை உறுதி செய்யவும் இது அவசியமாகிறது. ஆனால், குறுகிய அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்க்கிறார்கள் என்றார் பிரணாப் முகர்ஜி.
நாட்டின் வளர்ச்சி குறித்து பிரணாப் முகர்ஜி இப்படிப் பேசினாலும், 6.5 சதவீத வளர்ச்சியை எட்டுவது கூட ரொம்ப கஷ்டம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
கடும் வட்டி விகிதங்களும், 10 சதவீத பணவீக்கத்தையும் வைத்துக் கொண்டு நாடு பெரிய வளர்ச்சியை எட்டுவது இயலாத காரியம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications