அந்நிய முதலீட்டால் வேலைவாய்ப்பு என்பது பொய்; வேலை இழப்பு என்பதே உண்மை! - எல் கே அத்வானி
டெல்லி: சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது பொய்... இந்த அந்நிய முதலீட்டை அனுமதித்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்பதே உண்மை, என்றார் எல் கே அத்வானி.
டெல்லியில் இன்று நடந்த ஒரு மாநாட்டில் பா.ஜ.க. தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசுகையில், "சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதி லட்சக்கணக்கான மக்களின் வேலைக்கு உலை வைத்துவிடும்.
பா.ஜ.க. இதை அன்று முதல் இன்று வரை எதிர்த்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும் மத்திய அரசு அன்னிய முதலீட்டு விவகாரத்தில் முழுமையாக விசாரிக்காமல் அவசரம், அவசரமாக முடிவு எடுத்துள்ளது.
இந்த தவறை மறைப்பதற்காக மத்திய அரசு என்னவெல்லாமோ சொல்லி வருகிறது. அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்துள்ளதன் மூலம் பண வீக்கத்தையும், விலை உயர்வையும் கட்டுப்படுத்திவிடலாம் என்று மத்திய அரசு சொல்கிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் வருகையால் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் சொல்கிறது. மத்திய அரசு சொல்வது போல எதுவும் நடக்காது. இது மக்களை முட்டாளாக்கும் ஒரு ஏமாற்று வேலை. மேற்கத்திய நாடுகளை காப்பியடிப்பதை பிரதமர் மன்மோகன்சிங் கைவிடவேண்டும். அந்த பாணி நமக்கு சரிப்பட்டு வராது.
வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் மேற்கத்திய நாட்டுக்காரர்களுக்குத்தான் ஏற்றது. நமக்கு அது உதவாது. மத்திய அரசு இதில் அவசர முடிவு எடுத்து விட்டது. இந்த பிரச்சினைக்காக பாராளுமன்றம் தினமும் முடங்குவது எனக்கு கவலை அளிக்கிறது. என்றாலும் மக்கள் நலன் கருதி அன்னிய முதலீட்டை எதிர்த்து பா.ஜ.க. தொடர்ந்து போராடும்.
சமீபத்தில் நான் நடத்திய ரத யாத்திரை மதிப்பிட முடியாத அளவுக்கு எனக்கு பாடம் கற்று தந்துள்ளது. மக்கள் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. மதச் சார்பற்ற நிலையை இந்த யாத்திரை மேம்படுத்தியுள்ளது.
சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக ஆகி இருக்க முடியும். 50 ஆண்டுகள் கடந்தும் இந்தியா அந்த இலக்கை அடையாமல் உள்ளது. 2011-ம் ஆண்டு ஊழல் நிறைந்த ஆண்டாக போய்விட்டது," என்றார்.












Click it and Unblock the Notifications