சவுக்கு மர லோடு ஏற்றிய லாரி மீது அரசு பஸ் மோதி 2 பேர் பலி, 12 பேர் காயம்
காங்கயம்: சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சவுக்கு மர லோடு ஏற்றிய லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் பலியாகினர். பேருந்து ஓட்டுநர் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து, திருப்பூரை நோக்கி நேற்று காலையில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மூலப்பாளையத்தை சேர்ந்த வெட்ங்கடேசன் (35) பேருந்தை ஓட்டி வந்தார்.
அதிகாலை 4.45 மணிக்கு சிவன்மலை அருகே உள்ள தனியார் பள்ளியின் முன் காங்கயம்- திருப்பூர் சாலையோரத்தில் சரக்கு மர லோடு ஏற்றிய லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து லாரியில் அடுக்கப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் சுமார் 5 அடி தூரத்திற்கு பேருந்துக்குள் நுழைந்து கொண்டது. இதில் அரசு பேருந்தின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த போயம்பாளையத்தை சேர்ந்த நடத்துநர் ஆறுமுகம் (52), பயணி கண்ணன் (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடேசன், திருப்பூரை சேர்ந்த பயணி மாதவி (56), மன்னார்குடியை சேர்ந்த கெளரி (58) உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications