முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் கேரளா-தமிழக இளைஞர் தீக்குளிப்பு
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு படு மூர்க்கமாக செயல்பட்டு வருகிறது. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகிறது.
வலுவாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு புது அணை கட்டுவது உறுதி என்றும் அது கூறி வருகிறது.
இந்த நிலையில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து தமிழகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளார். கூடலூரைச் சேர்ந்தவர் செல்வபாண்டி. இவர் இன்று கேரளாவைக் கண்டித்து கூடலூரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அப்போது திடீரென செல்வபாண்டி தீக்குளித்தார்.
இதைப் பார்த்துப் பதறிய போராட்டத்தில் ஈடுபட்டோர் தீயை அணைத்து செல்வபாண்டியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கையில் தீக்காயத்துடன் செல்வபாண்டி சிகிச்சை பெற்று வருகிறார்.