ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் புடின் கட்சிக்கு பெரும் சரிவு
மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் விளாடிமீர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவின் மாபெரும் தலைவராக உருவெடுத்தவர் புடின். 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை இரண்டு முறை அந்த நாட்டு அதிபராக இருந்த புடின், மூன்றாவது முறையாக மீண்டும் தொடர்ந்து அந்தப் பதவியில் இருக்க விதிகள் இடம் தராததால் தனது ஆதரவாளரான டிமிட்ரி மெத்வதேவை அதிபராக்கிவிட்டு, பிரதமரானார் புடின்.
இந் நிலையில் அடுத்த 3 மாதங்களில் நடக்கும் அதிபர் தேர்தலில் புடின் மீண்டும் போட்டியிடலாம் என்று கருதப்படும் நிலையில், நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், புடினின் கட்சிக்கு 50 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. இத்தனைக்கும் வாக்குப் பதிவின்போது ஏராளமான முறைகேடுகளிலும் புடினின் கட்சியினர் ஈடுபட்டனர். அதையும் தாண்டி அந்தக் கட்சியின் ஆதரவு 17 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
அதே நேரத்தில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி 19.1 சதவீத வாக்கையே பெற்றுள்ளது. இன்னும் அந்தக் கட்சி மீது ரஷ்ய மக்களின் கோபம் இன்னும் தீரவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. ஆனாலும் கடந்த தேர்தலைவிட இது 8 சதவீதம் அதிகமாகும்.












Click it and Unblock the Notifications