பாகிஸ்தானிடம் பணிந்த யுஎஸ்: ஷம்சி விமான தளத்தை காலி செய்கிறது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஷம்சி விமானதளத்தை காலி செய்யும் பணிகளை அமெரிக்கா துவங்கியுள்ளது.
சமீபத்தில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசும் இதனால் பெரும் கடுப்பாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைத்திருக்கும் ஷம்சி விமானதளத்தை 15 நாட்களுக்குள் அதாவது வரும் 11ம் தேதிக்குள் காலி செய்யுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இந்த விமான தளத்தைத்தான் தனது தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கிய தளமாக அமெரிக்கப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கெடுவை நீட்டிக்குமாறு கேட்டும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சம்மதிக்கவில்லை. இதையடுத்து அமெரிக்கா ஷம்சி விமானதளத்தை காலி செய்யும் பணியை நேற்று துவங்கியது. இந்த விமானதளத்தில் பணிபுரியும் அமெரிக்கர்களை அழைத்துச் செல்ல அமெரிக்காவில் இருந்து விமானம் வந்தது. கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்க வீரர்கள் அந்த விமானத்தில் ஏறினர். அப்போது எப்ஐஏ அதிகாரிகளும் அங்கு இருந்தனர்.
அமெரிக்க வீரர்கள் விமானத்தில் ஏறும் வரை ஷம்சி விமானதளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் அரசு கடந்த 1992ம் ஆண்டு ஷம்சி விமானதளத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னர் பரம்பரையினருக்கு லீசுக்கு விட்டது. 9/11 தாக்குதல் நடந்ததில் இருந்து அந்த விமானதளத்தை அமெரிக்கா பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications