சென்னை-நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
மதுரை: சென்னை-நாகர்கோவில் இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
ரயில் பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையி்ல் தெற்கு ரயில்வே வாராந்திர சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி நாகர்கோவில்-சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி முதல் 30.1.2012 வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.
நாகர்கோவிலில் காலை 5.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னை,எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 13ம் தேதி முதல் 31.1.2012 வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூரில் பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் கடந்த 4ம் தேதி முதல் 29.1.2012 வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னையை அடையும்.
சென்னை,எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் கடந்த 5ம் தேதி முதல் 30.1.2012 வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து திங்கட்கிழமைகளில் பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
மேற்கண்ட ரயில்கள் அனைத்தும் வள்ளியூர், திருநெல்வேலி, வாஞ்சி, மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில்-சென்னை அதிவிரைவு ரயில்கள் மாம்பலத்திலும், சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் அரியலூரிலும் கூடுதலாக நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.