பொங்கல் முதல் 475 அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் - தமிழக அரசு முடிவு
சென்னை: வரும் பொங்கல் முதல் தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 475 புதிய பஸ்களை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசுப் பேருந்துகள் என்றாலே ஓட்டை உடைசல் என்ற நிலைதான் சமீப ஆண்டுகளாக நிலவி வருகிறது.
நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலானவை மிகவும் பழுதடைந்து ஓரம் கட்டக்கூடிய நிலையில் உள்ளன.
அல்ட்ரா- டீலக்ஸ் என்று அழைக்கக்கூடிய இந்த பஸ்களில் எல்லாமே உடைந்து வீணாகிவிட்டது. பஸ்சின் இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. பக்கவாட்டு கண்ணாடி எந்த பக்கமும் அசையாமல் நிற்பதால் பயணிகளின் விரும்பியவாறு எந்த பக்கமும் தள்ள முடியாது. இருக்கைகளில் மூட்டைப் பூச்சிகள் வேறு.
பஸ்கள் பராமரிப்பு இல்லாததால் அதில் ஏறி பயணம் செய்யவே மக்கள் தயங்கும் விலை ஏற்பட்டுள்ளது. இது தவிர குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்படும் விரைவு பஸ்கள் சரியான நேரத்திற்கு போய் சேருவதில்லை. மோசமான நிலையில் டயர்கள் இருப்பதால் வழியில் பஞ்சர் ஆகி நின்று விடுவதால் பயணிகள் விரைவு பஸ்சை தவிர்த்தனர். மேலும் சாலையோர ஓட்டல்களில் நீண்ட நேரம் நிறுத்தி நேரத்தை வீணாக்குவதாலும் பொதுமக்கள் ஏற தயங்குகின்றனர்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 3000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 8 போக்குவரத்து கழகங்களுக்கும் அவை பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. இதில் 475 பஸ்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன (இப்போது 948 பஸ்கள் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ளன).
அல்ட்ரா- டீலக்ஸ் வசதியுடன் பாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பொங்கல் முதல் புதிய பஸ்கள் வரத் தொடங்கி விடும். படிப்படியாக புதிய பஸ்கள் வந்ததும் பழைய பஸ்களில் மிகவும் மோசமானவற்றை தகுதியற்றவையாக பிரித்து ஒதுக்கி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய சொகுசு பஸ்களில் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் செய்யப்படும். சில பஸ்களை புதிய வழித்தடங்களில் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications