முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவே தீக்குளித்தேன்- கூடலூர் வாலிபர் பேட்டி
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும், தமிழர்களின் ஜீவாதாரத்தை பாதிக்கும் கேரளாவைக் கண்டிக்க வேண்டும், தமிழர்களின் உரிமையை காக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தீக்குளித்தேன் என்று கூடலூரில் நேற்று நடந்த போராட்டத்தின்போது தீக்குளித்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாலிபர் செல்லப்பாண்டி தெரிவித்துள்ளார்.
19 வயதான செல்லப்பாண்டி, நேற்று கூடலூரில் நடந்த போராட்டத்தின்போது திடீரென தீக்குளித்து விட்டார். இதையடுத்து அவரை போலீஸாரும், பொதுமக்களும் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்லப்பாண்டி இதுகுறித்துக் கூறுகையில், எனது உயிர்த் தியாகத்தால், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமான முல்லை பெரியாற அணை காக்கப்படும். தமிழர்களின் உரிமையை மீட்க முடியும் என்று நம்பினேன்.
கேரள எல்லை பகுதியில் வாழும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ எனது உயிர் தியாகம் உதவும் என்றும் கருதினேன். இதனால்தான் தீக்குளித்தேன் என்றார்.
செல்லப்பாண்டிக்கு 20 சதவீத அளவிலான தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.