சபரிமலையில் உயிரிழந்த விழுப்புரம் மூதாட்டி- கொண்டு வர முடியாமல் குமுளியில் காத்திருக்கும் உடல்
குமுளி: விழுப்புரத்தைச் சேர்ந்த 65 வயதுப் பெண்மணி சபரிமலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் குமுளி கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்து தமிழகத்திற்கு வர ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்து விட்டதால் உடல் அழுகும் நிலைக்குச் சென்று கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் லீலா. 65 வயதான இவர் சபரிமலைக்கு சென்றிருந்தார். சன்னிதானத்திற்கு பாதயாத்திரையாகப் போனபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஐயப்ப சேவா சங்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி குமுளி வழியாக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குமுளியோடு டிரைவர் நின்று விட்டார். தமிழகத்தில் அசாதாரண நிலை நிலவவதால் அதற்கு மேல் போக ஆம்புலன்ஸ் டிரைவர் முன்வரவில்லை.
இதனால் உடல் குமுளியிலேயே நடுச் சாலையில் ஆம்புலன்ஸில் காத்திருக்கிறது. அந்த ஆம்புலன்ஸில் ப்ரீசர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததால் உடல் அழுகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்திலிருந்து ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் உடலை அனுப்பி வைக்கத் திட்டமிட்டிருப்பதாக கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications