கேரளா மீது 1 வாரம் பொருளாதார தடை விதிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
சென்னை: தமிழகத்தை நம்பியே கேரள மாநிலம் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான 8 பாதைகளையும் 1 வாரத்துக்கு மூடி வைத்து கேரளாவுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று பாமாக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை மையமாக வைத்து தமிழர்களின் மீது கேரள மாநிலத்தவர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இனியும் இவற்றை நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது. நமது உரிமைக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவி்ட்டது.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, மாநில எல்லை வரையறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த கே.எம்.பணிக்கர் என்ற மலையாளி, தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் உள்ள தனது சொத்துகளை காப்பாற்றிக் கொள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்காமல் கேரளா உடன் இணைத்தார். அதனை அப்போது இருந்த தமிழக ஆட்சியாளர்கள் பெருந்தன்மை உடன் அனுமதித்தது தான் முல்லைப் பெரியாறு அணை சிக்கல் ஏற்பட காரணம்.
தமிழகத்தின் உணர்வுகளை கேரளா மதிக்காமல் செயல்படும் போது, நமக்குரிய தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கோரி, தமிழக அரசு குரல் எழுப்ப வேண்டும். கேரளாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டப்படுவதையும், தமிழகத்தில் இருந்து விலை மதிப்பற்ற ஆற்று மணல் கேரளாவுக்கு கொள்ளையடிக்கப்படுவதையும் தமிழகம் உடனடியாக தடை செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசின் அடாவடி போக்கிற்கு தமிழகம் பதிலடி கொடுத்தால் என்ன ஆகும் என்பதை உணர்த்தும் வகையில், இரு மாநில எல்லையில் உள்ள கம்பம்மெட்டு, போடி, மெட்டு, குமுளி மெட்டு, செங்கோட்டை, கவியக்காவிளை உள்ளிட்ட 8 வழிகளையும் ஒருவாரத்துக்கு மூடி பொருளாதார முற்றுகையை அறிவிக்க வேண்டும்.
இந்த வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால், இறைச்சி உள்ளிட்டவை கொண்டு செல்ல தடைவிதித்து தமிழகத்தை நம்பி தான் கேரளா உள்ளது. கேரளாவை நம்பி தமிழகம் இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் அணுகுமுறையைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள மக்கள் அமைதியான வழியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை தடுக்கவோ, போராட்டக்காரர்களை கைது செய்யவோ தமிழக அரசு முயற்சி செய்ய கூடாது.
முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழக கட்சிகள் அனைத்தும் ஒரே கருத்தை கொண்டுள்ளன என்று முதல்வர் கூறியிருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு வசதியாக அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.