திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் - இன்ஸ்பெக்டர் சிறைப்பிடிப்பு
திருச்சி: திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் அனுமதி பெறாமல் நடத்திய போராட்டத்தை தடுக்க வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பை மாணவர்கள் சிறை பிடித்தனர்.
திருச்சியில் கடந்த 4ம் தேதி வங்கிப் பணிக்கான எழுத்து தேர்வுக்கு தாமதமாக வந்த 75 பேருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் சரவணத்தமிழன் என்பவரும் ஒருவர்.
இவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் சட்டக் கல்லூரி முன்பு போலீஸ் அனுமதி பெறாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து கல்லூரிக்குள் கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் பெரியய்யா மற்றும் போலீஸார் ஜீப்பில் வந்தனர். கல்லூரி வளாகத்திற்குள் போலீசார் வந்ததை கண்டித்து போலீஸ் ஜீப்புடன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தினுள் வைத்து பூட்டி சிறைப் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் காமராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்ஸ்பெக்டரையும், போலீஸ் ஜீப்பையும் மீ்ட்டுச் சென்றார்.