தமிழக, கேரளா எல்லையில் பதற்றம்: கம்பம்மெட்டில் விவசாயிகள் மீது போலீஸ் திடீர் தடியடி!

தமிழக கேரள எல்லையில் பதற்றம்
முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் தமிழக – கேரளா எல்லையில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணையை நோக்கி பேரணி
இதனிடையை கடந்த சனிக்கிழமையன்று தேனி மாவட்ட விவசாயிகள் திடீரென கேரள எல்லையை நோக்கி பேரணியாக சென்று முல்லைப் பெரியாறு அணையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனையடுத்து அவர்களை கேரள எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் வீட்டிற்கு திரும்பி செல்ல வலியுறுத்தினர். ஞாயிற்றுக்கிழமையன்றும் லட்சக்கணக்கான விவசாயிகள் கேரளா எல்லையை நோக்கி படையெடுத்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று அஞ்சிய போலீசார் அவர்களை எல்லைப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் கேட்டுக்கொண்டும் அவர்கள் பின்வாங்காமல் அணையை நோக்கி முன்னேறினர். இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்த நேரிட்டது.
மூன்றாவது நாளாக ஊர்வலம்
இந்த நிலையில் அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, குச்சனூர், சடையனூர், மார்க்கேயன் கோட்டை, உ.அய்யம்பட்டி உள்பட 25 கிராம மக்கள் திரண்டு கூடலூர் சென்றனர். பின்னர் அவர்கள் டிராக்டர், வேன், லாரிகளில் குமுளியை நோக்கி புறப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் கையில் தடி, இரும்பு கம்புகளுடன் இருசக்கர வாகனங்களில் சென்றனர். மூன்றாவது நாளாக இன்று காலை 10 மணிக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர் நேரம் செல்ல செல்ல மேலும் சில கிராம குவிந்த வண்ணம் உள்ளதால் தமிழக எல்லை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு 5 அடுக்குப் பதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரத்திற்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
கம்பம் மெட்டில் தடியடி
இதனிடையே குமுளி வழியாக செல்ல தடை உள்ளதால் கம்பம் மெட்டு வழியாக 20 ஆயிரம்திற்கும் மேற்பட்டோர் கேரளாவிற்கு செல்ல முயன்றனர். அப்பகுதியில் 144 தடியடி உள்ளதை சுட்டிக்காட்டிய போலீசார் மக்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு காவல்துறை வாகனங்களை அடித்து உடைத்தனர். இதனையடுத்து போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கம்பம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி உத்தமபாளையத்திலேயே நிறுத்தப்படுகின்றன. பின்னர் கடுமையான சோதனைக்குபின்னரே கம்பம் நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications