பொது மக்கள் முன் மனைவியை கொலை செய்த கல்லூரி ஊழியர் கைது
அஞ்சுகிராமம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கல்லூரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்குமார். ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுரியில் லேப் டெக்னிசியனாக வேலை பார்த்தார். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரு மகள்கள் உள்ளனர்.
பிஎஸ்சி பட்டதாரியான அனிதா வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அனிதாவின் நடத்தையில் செல்வராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் மீண்டும் செல்வராஜ்குமார் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த செல்வராஜ்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சராமரியாக வெட்டினார்.
இதில் அனிதாவின் கை மற்றும் கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதை பார்த்த செல்வராஜ்குமார் ஆத்திரம் தீராமல் பொதுமக்கள் முன்பாகவே மீண்டும் அனிதாவின் கழுத்தை அறுத்தார். அதில் ரத்தம் பீறிட்டு சம்பவ இடத்திலேயே அனிதா உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த கறையுடன் நின்று கொண்டிருந்த செல்வராஜ்குமாரை கைது செய்தனர். கொலை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.