வந்தவாசியில் மினிவேன்- கரும்பு லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி
வந்தவாசி: வந்தவாசி அருகே மினி வேன், கரும்பு லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. ஏந்தல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள இவருக்கு, சேத்துப்பட்டை அடுத்த பழம்பேட்டையில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக 25க்கும் மேற்பட்டோர் அடங்கிய திருமண குழு, மினி வேனில் பழம்பேட்டைக்கு நேற்று மாலையில் புறப்பட்டு சென்றனர். ஏந்தல் கூட்ரோடு அருகே சென்றபோது, சேத்துப்பட்டில் இருந்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நோக்கி சென்ற கரும்பு லோடு ஏற்றி சென்ற லாரி மினி லாரியின் மீது மோதியது. இதில் மினி வேன் நொறுங்கி, பயணம் செய்த அனைவரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் ஏந்தலை சேர்ந்த பூங்காவனம்(50), பிச்சாண்டி(45), வடிவேல்(50), லலிதா(45) உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த 20 பேர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து வடவணக்கம்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications