மதுரை முத்தூட், மணப்புரம் நிறுவனங்கள் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்குதல்
மதுரை: மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் முத்தூட் கார்ப், மணப்புரம் நிறுவனம் உள்ளிட்ட மலையாளிகளி்ன் கடைகளை இன்று அடித்து நொறுக்கினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கேரள அரசுககு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பிரிவினர் திடீர் என்று முத்தூட் கார்ப், மணப்புரம் நிறுவனம் உள்ளிட்ட மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்கினர்.
மதுரையில் மட்டும் முத்தூட் நிறுவனத்திற்கு 50 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா, திருச்சிற்றம்பலத்தில் உள்ள முத்தூட் நிறுவனமும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்த்து வரும் தமிழர்களை மலையாளிகள் தாக்குவதால் அவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல புதுச்சேரியிலும் மலையாளிகளின் நிறுவனங்கள் மீது மாணவர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
மதுரையில் மலையாளிகள் நிறுவனங்களை மூட நடவடிக்கை?:
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தீரும் வரை மதுரையில் உள்ள மலையாளிகளின் நிறுவனங்களை மூடுவது குறித்து அரசுக்கு தெரிவித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறியுள்ளார்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராமசாமி தலைமையில் 200 வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் சகாயத்தை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். மலையாளிகள் நடத்தும் தனியார் நிறுவனங்களை உடனே மூட உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தீரும் வரை அந்த நிறுவனங்களைத் திறக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கு சகாயம் கூறுகையில், எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. அதனால் இதை அரசின் கவனத்திற்கு கொண்ட சென்ற பிறகு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.