Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடுக்கியில் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள்: தமிழகர்களை விரட்டியடிக்கும் மலையாளிகள்

Subscribe to Oneindia Tamil

Idukki
போடி: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் மீது மலையாளிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உயிருக்கு பயந்து தமிழர்கள் தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக கேரளாவில் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளாவில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப்பாறை, நெடுங்கண்டம் உள்பட பல இடங்களில் 10,000 தமிழர்கள் தங்கள் குடும்பத்தோடு வாழ்கின்றனர். அவர்கள் ஏலத்தோட்டங்கள், காப்பித்தோட்டங்கள், மிளகு தோட்டங்களில் தங்கி வேலை செய்கின்றனர்.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீரிமட்டத்தை குறைக்கக் கோரிய கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடு்தது அங்குள்ள ஏலத் தோட்டங்களில் வேலைபார்ககும் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடிக்கின்றனர்.

இதையடுத்து ஏராளமான தமிழர்கள் உயிருக்கு பயந்து இரவோடு இரவாக கேரளாவில் இருந்து குடும்பத்தோடு தமிழகத்திற்கு தப்பி வருகின்றனர். அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வசித்த செல்வி (48), தங்கம் (24), முனீஸ்வரி (26), ஈஸ்வரன் (33), ்வருடைய மனைவி காமுத்தாய் (30), மகேஸ்வரி (27), அபர்ணா (4), 2 மாத கைக்குழந்தை சக்திகுமார், கங்கா (7), சக்தி பங்காரு (10), சங்கீதா (7) ஆகிய 11 பேர் கேரளாவில் இருந்து தப்பி வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் சதுரங்கபாறை மெட்டு வழியாக வந்து போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு போடி தாசில்தார் நா. நாகமலை அவர்களுக்கு உணவு மற்றும் தங்க வசதி செய்து கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கேரளாவில் இருந்து தப்பியோடி வந்துள்ள 11 தமிழர்கள் இங்கு தஞ்சம் அடைந்துளளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வந்தவர்களில் காமுத்தாய் என்பவரின் கைக்குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அதற்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.

உயிருக்கு பயந்து வந்தவர்கள் கூறியதாவது,

எங்களில் செல்வி, தங்கம், முனீஸ்வரி ஆகியோர் 3 தலைமுறையாக கேரளாவில் வசித்து வந்தோம். கஞ்சிகலயம் பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களில் தங்கி கூலி வேலை செய்து வந்தோம். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து ஏலத்தோட்டங்களில் தங்கி வேலைபார்க்கும் தமிழர்களை மலையாளிகள் அடித்து விரட்டுகின்றனர். அவ்வாறு தாக்கும்போது விளக்குகளை அணைத்து விட்டு, கேபிள் இணைப்புகளையும் துண்டித்துவிடுகின்றனர்.

பாரத்தோடு, மைலாடும்பாறை, ஆட்டுவாரை, ஆடுகூந்தல், நெடுங்கண்டம், பாம்பன்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலத்தோட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். உயிர் பிழைத்தால் போதும் என்றும் நினைத்து காலை 7 மணிக்கு வனப்பகுதி வழியாக தமிழகம் புறப்பட்டோம். மாலை நேரத்தில் தேவாரம் வந்து போடி தாலுகா அலுவலகத்திற்கு வந்தோம்.

மலையாளிகள் எங்களை தாக்குகிறார்கள் என்று நாங்கள் கேரளாவில் உள்ள காவல் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக அவர்களும் எங்களைத் தாக்குகின்றனர் என்றனர்.

இந்நிலையில் உடும்பன்சோலை பஞ்சாயத்துக்குடிபட்ட பகுதிகளில் இருந்து மேலும் 25க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நெடுந்தூரம் நடந்து தேவாரம் வந்துள்ளனர். அவர்கள் தேவாரத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது,

வசந்தா (பெருமாள்குளம் எஸ்டேட்) கூறியதாவது,

நான் சிறுவயதில் இருந்து கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை பார்த்து வருகிறேன். முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக மலையாளிகள் எங்களைத் தாக்கி கண்டபடி திட்டுகிறார்கள். ஒரு மணி நேரத்திற்குள் வீட்டை காலி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது என்று மிரட்டினார்கள். இரவு நேரத்தில் வீடுகளுக்குள் கற்களை எறிந்தார்கள்.

ஆண்டிச்சாமி (பெருமாள் குளம் எஸ்டேட்): உடுப்பஞ்சோலையில் உள்ள தமிழர்கள் பகுதியிக்கு ஆட்டோவில் வந்த மலையாளிகள் வயதானவர் என்று கூட பார்க்காமல் வாய்க்கு வந்தவாறு திட்டி என்னை அடித்தனர். உங்கள் ஊருக்கு ஓடுடா என்று விரட்டினார்கள். பேருந்தில் ஏறினால் டிக்கெட் தர மறுக்கின்றனர்.கம்பம் மெட்டு வழியே பஸ் இல்லாததால் நான் வேலை பார்த்த எஸ்டேட்டில் இருந்து 13 கிமீ நடந்து வந்தேன்.

கடந்த 3 நாட்களில் குறைந்தது 1000 தமிழ்க்குடும்பங்கள் வெளியேறியுள்ளன. காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தால் எங்களை ஊருக்கு போகச் சொல்கின்றனர். அப்பகுதி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்ததற்கு மிரட்டத்தானே செய்கிறார்கள் தாக்கினால் வந்து சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+