சீமான் போராட்டம் எதிரொலி-களக்காடு சாஸ்தா கோயிலில் விரதம் முடிக்கும் ஐயப்ப பக்தர்கள்
களக்காடு: நாம் தமிழர் கட்சியினர் செங்கோட்டை – ஆரியங்காவு சாலையில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதை அடுத்து சபரிமலை செல்ல முடியாத தேனி ஐயப்ப பக்தர்கள் களக்காடு சாஸ்தா கோயிலுக்கு இருமுடியுடன் வந்து நெய் அபிஷேகம் செய்து விரதத்தை முடித்தனர்.
முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக-கேரள எல்லையோரங்களில் பதற்றம் நிலவுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. கம்பம், குமுளி வழியாக கேரளாவுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு சென்று ஐயப்ப பக்தர்கள் விரதம் முடித்தனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் செங்கோட்டை – ஆரியங்காவு சாலையில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்த சாலைகளில் இருமாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
களக்காடு சாஸ்தா கோவில்
இதனால் அச்சமடைந்துள்ள தமிழக ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாத நிலை எழுந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள ஐயப்ப கோயில்களில் விரதத்தை முடிக்கின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஏரக்கோட்டைபட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 35 பேர் குருசாமி தலைமையில் களக்காடு ஐயப்பன் கோயிலுக்கு இருமுடியுடன் வந்தனர். அவர்களை களக்காடு பக்தர்கள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் கோயில் ஆற்றங்கரையில் பேட்டை துள்ளல் நடத்தினர். தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் சாஸ்தாவுக்கு நெய் அபிஷேகம் செய்து விரதத்தை முடித்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து குருசாமி கதிர்வேல் கூறுகையில், நான் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சபரி்மலை சென்று வருகிறேன். இதுவரை நாங்கள் கம்பம், குமுளி வழியாகவே சென்று வந்துள்ளோம். இந்த வருடம் முல்லை பெரியாறு அணை விவகாரத்தால் சபரி்மலை செல்ல முடியவில்லை.
ஆரியங்காவு வழியாக செல்லும் தமிழக பக்தர்களை மலையாளிகள் தாக்குவதாக தகவல் வந்ததால் நாங்கள் களக்காடு கோயிலில் விரதத்தை நிறைவு செய்ய முடிவு செய்தோம்.
கடந்த 16ம் தேதி எரக்கோட்டைபட்டியிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தோம். களக்காடு கோயிலுக்கு வந்து விரத்ததை முடித்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications