லோக்பால் மசோதா: பிரதமர் ஒப்புதல், அன்னா குழு நிராகரிப்பு
டெல்லி: ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் அந்த மசோதாவை ஏற்க அன்னா குழுவினர் மறுத்துள்ளனர்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா அறிக்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து சிஎன்என்-ஐபின் தெரிவித்துள்ளதாவது,
லோக்பால் மசோதாவின்படி யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே லோக்பால் அதிகாரிகளால் அதை விசாரிக்க முடியும். லோக்பால் அமைப்பின் தலைமையை பிரதமர், எதிர்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் நியமிப்பார்கள். 100 எம்.பி.க்கள் ஆதரவளித்தால் லோக்பால் தலைமையை நீக்கிவிடலாம். சிபிஐ லோக்பால் வட்டத்தில் வராது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை ஏற்க அன்னா குழுவினர் மறுத்துள்ளனர். தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மசோதாவால் எந்த பலனும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அன்னா குழு உறுப்பினரான பிரஷாந்த் பூஷன் கூறியதாவது,
இந்த மசோதாவின்படி விசாரணை நடத்தும் உரிமை தான் லோக்பாலுக்கு உள்ளது. அதை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். லோக்பால் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனால் ஒரு உபயோகமும் இல்லை. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்கள் அன்னாவை மறுபடியும் உண்ணாவிரதம் இருக்கத் தூண்டியுள்ளனர். எங்களின் கோரிக்கைள் பலவற்றை நிராகரி்ததுள்ளனர். இதில் சமரசத்திற்கே இடமில்லை என்றார்.
இந்நிலையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி வரை 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா சமர்பிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications