நாளை 'கட்டிங்' கிடையாது- கேரளாவைக் கண்டித்து சலூன் கடைக்கார்ரகள் ஸ்டிரைக்!
கோவை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் போக்கைக் கண்டித்து நாளை கோவை மாவட்டம் முழுவதும் முடிதிருத்துனர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இதனால் நாளை அனைத்துக் கடைகளும் அடைக்கப்படுகின்றன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கேரளாவைக் கண்டித்து ஏதாவது ஒரு வகையில் போராட்டம் நடத்தி மக்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
பேரணிகள், உண்ணாவிரதம், கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட பல்வகை போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் கோவை மாவட்ட சவரத் தொழிலாளர்கள் நாளை ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து சங்கத் தரப்பில் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா காட்டி வரும் பிடிவாதம் கண்டனத்துக்குரியது. மேலும் தமிழகத்திலிருந்து செல்லும் மக்கள், வாகனங்களைத் தாக்கி வருவது கடும் கண்டனத்துக்குரியது.
கேரளாவின் இந்த தாக்குதல், பிடிவாதத்தைக் கண்டித்து நாளை மாவட்டம் முழுவதும் கடைகளை மூடி போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.