நாளை சனிப் பெயர்ச்சி-இன்று சசி பெயர்ச்சி: எஸ்.வி.சேகர்
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நட்பு வட்டத்திற்குள் இருந்தவர் எஸ்.வி.சேகர். பிராமணரான இவரை வைத்து பிராமணர்களின் வாக்குகளை கவரும் முயற்சியாக சேகரை அதிமுகவில் இணைத்தார் ஜெயலலிதா. ஆனால் நாளாவட்டத்தில் சசி குரூப்பால் கட்சிக்குள் கட்டம் கட்டப்பட்டு பின்னர் கட்சியை விட்டும் நீக்கப்பட்டவர்.
இவரிடம் சசிகலா குரூப் நீக்கப்பட்டது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்து கேட்டது. அப்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா அவர்கள் உற்ற தோழி, நெருங்கிய தோழி என்ற பதவியை எடுக்கவில்லை. உற்ற தோழியாக இருக்கலாம். நெருங்கிய தோழியாக இருக்கலாம். அவர்கள் அறிவித்திருப்பது என்னவென்றால், அதிமுகவில் இருக்கக் கூடிய பதவியை பறித்திருக்கிறார்கள். இல்லத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற்றப்படவில்லை.
இல்லத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பே வெளியே போய்விட்டதாக சொல்லுகிறார்கள். அதைப்பற்றி பேசத் தேவையில்லை. நம்மைப் பொறுத்தவரை அதிமுகவில் இருந்து ஒரு பவர் செக்டராக இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இது என்றைக்கோ நடக்கும் என்று பலபேர் எதிர்பார்த்தார்கள். பலபேர் சாபமிட்டார்கள். பலபேர் இதுநடக்காதா என ஏங்கினார்கள். அது இன்று நடந்திருக்கிறது. நாளைக்கு சனி பெயர்ச்சி. அது சசி பெயர்ச்சியாகிவிட்டது என்றார் சேகர்.