சபரிமலை கோவிலுக்குள் நுழைய தந்திரி பேரனுக்கு அனுமதி மறுப்பு: கேரளா ஐகோர்ட் அதிரடி
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய தந்திரியின் மகள் வழிப் பேரனுக்கு அனுமதி மறுத்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரியாக இருப்பவர் கண்டரரு மகேஷ்வரரு. கடந்த சில தினங்களுக்கு முன்பு மகேஷ்வரரு தனது மகள் வழிப் பேரன் நரேஷ் ஈஸ்வரை கோவில் சன்னிதானத்திற்குள் அழைத்து சென்றார். அதைப் பார்த்த தேவசம் போர்டு அதிகாரிகள் நரேஷை உள்ளேவிட மறுத்துவிட்டனர்.
இதனால் கண்டரரு மகேஷ்வரருக்கும் தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபரிமலையில் மகள் வழிப்பேரனை அனுமதிப்பது இல்லை என்ற மரபு இருக்கையில் அதை மீறயதற்காக மகேஷ்வரரு மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தேவசம் போர்டு அறிவித்தது.
இதற்கிடையே தன்னை அனுமதிக்காத தேவசம் போர்டு அதிகாரிகள் மீது கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும், சன்னிதானத்திற்குள் நிச்சயமாக நுழையப் போவதாகவும் நரேஷ் ஈஸ்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தந்திரி இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
எனக்கு வயதாகிவிட்டது. அதனால் தான் பேரன் நரேஷ் ஈஸ்வரை எனக்கு உதவியாக சன்னிதானத்திற்குள் அழைத்துச் சென்றேன். ஆனால் தேவசம் போர்டு அதிகாரிகள் எனது பேரனுக்கு அனுமதி மறு்ததுவிட்டனர். எனவே, எனது பேரனை சன்னிதானத்திற்குள் அனுமதிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தோட்டத்தில் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
சபரிமலை தந்திரி தனக்கு யார் உதவி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே தேவசம் போர்டு நிர்வாகத்திடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார். சபரிமலையில் மகள் வழிப் பேரன்களை பூஜையில் அனுமதிப்பதில்லை என்பது மரபாக இருந்தும் அதை தந்திரி மீறி இருப்பது சரியல்ல. தேவசம் போர்டு அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர். தந்திரியின் மகள் வழிப் பேரன் நரேஷ் ஈஸ்வர் சபரிமலை கோவிலுக்குள் நுழைய எக்காரணம் கொண்டும் அனுமதி கிடையாது என்று அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
ஏற்கனவே மகேஷ்வரரு தனது மகன் மோகனரரு கண்டரருவை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விபச்சார வழக்கில் சிக்கிய மோகனரரு தந்திரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் மோகனரருவுக்கு கோவிலுக்குள் நுழைய நீதிமன்றம் அனுமதி மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications