ஒரு குடும்பத்துக்காக 'அம்மா' ஆட்சி நடத்தவில்லை-ஜெ. முன்னிலையில் சசி நீக்கத்திற்கு பி.எச்.பாண்டியன்
சென்னையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அவர் பேசுகையில், சசிகலா நீக்கத்தை மறைமுகமாக வரவேற்று அவர் இவ்வாறு பேசியபோது கூட்டத்தில் எழுந்த கரகோஷம் அடங்க நீண்ட நேரமாயிற்று.
சசிகலா கூட்டத்தை அதிமுகவை விட்டு நீக்கிய பின்னர் நேற்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட நிகழ்ச்சிதான் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழா. சென்னை கீழ்ப்பாகம் பால்பர் சாலையில் உள்ள இறைமக்கள் புத்துணர்வு மையத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
இதில் ஜெயலலிதா கலந்து கொண்டார். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சபாநாயகரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் கூறுகையில்,
முதல்வர் ஜெயலலிதா சாதி, மத வேறுபாடு இல்லாமல் ஆட்சி செய்து எல்லோருக்கும் சேவை செய்து கொண்டு இருக்கிறார். பொது சேவை என்ற எண்ணத்தை மனத்தில் வைத்து தியாக மனப்பான்மையோடு நீதி, நேர்மை இவை அனைத்தையும் ஒருங்கே பெற்று இந்தியாவில் உள்ள அனைத்து முதல்-அமைச்சர்களுக்கும் எடுத்துக்காட்டும் வகையில் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்.
ஆட்சியில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறார். தமிழ்நாட்டில் எல்லா மக்களுடைய நம்பிக்கையையும் பெற்று இருக்கிறார். ஒரு நாட்டில் கோடிக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இன்றைக்கு பாதுகாவலராக முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டி கொண்டு இருக்கிறார்.
ஒரு குடும்பத்துக்கு என்று ஆட்சி செய்யாமல் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். அரசியலில் இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி இருக்கிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அ.தி.மு.க. தொண்டர்கள் இன்றைக்கு மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். உங்களுடைய விசுவாசிகள் என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற உறுதிமொழியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக நாங்கள் எல்லாம் அவர் மறையும் வரை எப்படி இருந்தோமோ அதே போல எங்களுடைய இறுதி காலத்திலும், புரட்சி தலைவி எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம்.
இங்கு எல்லா கிறிஸ்தவ மக்களும் இருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜெயலலிதாவுக்கு சக்தி கொடுக்க வேண்டும். முழுமையான சக்தி, தெய்வ சக்தி வேண்டும் வேண்டும் என்று எல்லோரும் ஜெபம் செய்ய வேண்டும் என்றார் அவர்.
மயிலை உயர் மறை மாவட்ட தலைவர் பேராயர் ஏ.எம்.சின்னப்பா பேசுகையில்,
இன்று நாம் அனைவரும் ஒன்று சேரும் நிகழ்ச்சியாகும். இப்படிப்பட்ட வரலாறு நிகழ்ச்சி இதுவரை நடந்தது இல்லை. இந்த நிகழ்ச்சி மதங்களை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சியாகும். அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றும் திட்டங்களுக்கும் என்றும் உறுதுணையாக இருப்போம் என்றார் அவர்.