டிரம்பால் இனி ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது.. புதிய திட்டத்துடன் இறங்கிய ஈரான்!
ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தையும், இவ்வழியாக நடக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை வைத்து பெரிய அளவில் நிதி திரட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்களுக்கு பிட்காயின் அடிப்படையிலான காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஈரான்.
"ஹார்முஸ் சேஃப்" (Hormuz Safe) என்று பெயரிடப்பட்ட இந்த தளம், ஈரானின் பொருளாதார மற்றும் மக்களின் நலன்களை மேம்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஈரான் திட்டமிட்டு பிட்காயின் அடிப்படையிலான இன்சூரன்ஸ் பேமெண்ட் முறையை கொண்டு வர முக்கிய காரணம் உள்ளது.

20 சதவீதம் எரிபொருள்
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்று. உலகில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து ஐரோப்பா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய பாதை இது. இப்படிப்பட்ட முக்கியமான வழித்தடத்தை ஈரான் மொத்தமாக கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாய் உள்ளது.
புதிய பிட்காயின் காப்பீட்டு திட்டம்
ஈரானின் பொருளாதார மற்றும் நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டம், ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்கள் மற்றும் சரக்குகளுக்கு கிரிப்டோகரன்சி அடிப்படையில் காப்பீடு வழங்கும். கப்பல் உரிமையாளர்கள் மற்றும் சரக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் இந்த தளத்தில் பதிவு செய்து, பிட்காயினில் பணம் செலுத்தி காப்பீட்டுப் பாதுகாப்பு பெறலாம்.
ஈரான் அரசு இந்த திட்டம் ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் (சுமார் ₹83,000 கோடி) வரை வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கிறது. எதற்காக காப்பீடு என்ற கேள்வி எழும்? ஈரான் இப்பகுதியில் அதிகப்படியான கண்ணி வெடி வைத்திருக்கும் வேளையில் இப்பாதையில் கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்றால் கட்டாயம் ஈரான் உதவி வேண்டும்.
இதேவேளையில் இப்பாதை வழியாக கப்பல் செல்ல வேண்டும் என்றால் கப்பல்கள் 2 மில்லியன் டாலர் டோல் கட்டணம் ஈரானுக்கு செலுக்க வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளது. இந்த நிலையில் இக்கட்டணத்தை காப்பீடு வாயிலாக பெறப்பட்டு, பணத்தை கட்டும் கப்பல்களை பாதுகாப்பாக கடக்க ஈரான் வழிவகை செய்யும். டோல் கட்டணத்தை தற்போது காப்பீடாக ஈரான் விற்க முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்துடன் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிக்க "பெர்ஷியன் கல்ஃப் ஸ்ட்ரெய்ட் அத்தாரிட்டி" (PGSA) என்ற புதிய அமைப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் கட்டண வசூல் ஆகியவற்றை முழுமையாக கையாளும்.
ஏன் பிட்காயின்?
டாலர், யூவான், யூரோ என எப்படி பணத்தை வசூல் செய்தாலும் அதை மேறகத்திய நாடுகள் சேர்ந்து தடை விதித்து விடுகிறது. இதனால் ஓப்பன் கரன்சி வர்த்தகமாக இருக்கும் பிட்காயின் அடிப்படையில் வசூலிக்கும் போது, எந்த நாடும், அரசும் டிராக் செய்ய முடியாது, ஈரான் சுதந்திரமாக வர்த்தகத்தை செயல்படுத்த முடியும்.
போர் பதற்றத்துக்கு பிறகு ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், "போருக்கு முந்தைய நிலைக்கு ஹார்முஸ்-ல் கடல் போக்குவரத்து திரும்பாது" என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்தப் புதிய திட்டம், ஈரான் தனது பொருளாதார பலப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் உலகளாவிய கப்பல் நிறுவனங்கள் மற்றும் அரசுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சட்டங்களின்படி, ஹார்முஸ் போன்ற சர்வதேச கடல் பாதைகளில் கட்டணம் வசூலிப்பது குற்றச்செயல். இருப்பினும், ஈரான் இதை "காப்பீட்டு சேவை" என்று அழைத்து, சட்ட ரீதியான சிக்கல்களைத் தவிர்க்க முயற்சிக்கிறது.
இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு இந்த இன்சூரன்ஸ் நேரடி நிதி பாதிப்பை ஏற்படுத்தும். கப்பல் காப்பீட்டு செலவு அதிகரித்தால், எண்ணெய் இறக்குமதிச் செலவும் உயரும். இது உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
ஈரானின் இந்த நடவடிக்கை, எண்ணெய், கிரிப்டோகரன்சி மற்றும் புவிசார் அரசியல் ஆகியவை இணைந்த புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications