அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு.. இனி குடியுரிமை கிடையாது! டிரம்ப் புது உத்தரவு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே அந்நாட்டு குடியுரிமை கிடைக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டினர் அங்கு சென்று குழந்தை பெற்றுக்கொள்ளும் 'பிறப்புச் சுற்றுலா' முறைக்கு எதிராக அமெரிக்க அரசு தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசா மோசடி மற்றும் பண மோசடி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க விசா
அமெரிக்க விசா கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தாலும் கூட, அங்கு பிறக்கும் வேறு நாட்டு குழந்தைகளுக்கு ஈஸியாக குடியுரிமை கிடைத்துவிடும். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கான இடம் இருக்கிறது. இது வெளிநாட்டு மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. அமெரிக்காவுக்கு வேலைக்கு போனால்.. கரும்பு மாதிரி பிழிந்து எடுத்துவிட்டு சக்கையாக வெளியில் துப்பிவிடுவார்கள். இருந்தாலும் அமெரிக்கா வேலையில் இருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமே குழந்தை குடியுரிமைதான். இப்படி இருக்கையில் இந்த திட்டத்திற்கும் டிரம்ப் ஆப்பு வைத்திருக்கிறார்.
பிறப்பு சுற்றுலா
அதாவது ஒரு சிலர், குழந்தையை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். குறிப்பாக சீனா, ரஷ்யா, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா விசா மூலம் அமெரிக்கா சென்று அங்கு குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இதனை பிறப்புச் சுற்றுலா என்று சொல்வார்கள். இப்படி அமெரிக்காவுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே உள்ளே வருபவர்கள் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.
அதிரடி நடவடிக்கை
இத்தகைய செயல்களை ஒருங்கிணைக்கும் ஏஜென்சிகள் மற்றும் பிரசவ மருத்துவமனைகள் மீது அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. விசா நேர்காணலின் போது உண்மையான காரணத்தை மறைப்பது விசா மோசடி எனக் கருதப்படும் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
இத்தகைய பயணங்களுக்காக ஏஜென்சிகளுக்குப் பெருந்தொகை வழங்கப்படுவதையும், அந்தப் பணம் சட்டவிரோதப் பரிமாற்றங்கள் மூலம் அமெரிக்காவிற்குள் கொண்டு வரப்படுவதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது பணமோசடி சட்டத்தின் கீழ் வரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
என்ன பாதிப்புகள் ஏற்படும்?
ஒருவேளை பிறப்புச் சுற்றுலா மூலம் கர்ப்பினிகள் அமெரிக்காவுக்குள் நுழைவது தெரிந்துவிட்டது எனில், விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்குப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அமெரிக்காவிற்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்படலாம். அபராதங்கள் விதிக்கப்படலாம்.
அதிக ஆபத்து
கர்ப்பிணிப் பெண்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல உதவும் சட்டவிரோத ஏஜென்சிகள், அவர்களுக்கு எப்படிப் பொய் சொல்ல வேண்டும் என்று பயிற்சி அளிக்கின்றன. இத்தகைய ஏஜென்சிகளை முடக்குவதே அமெரிக்க அரசின் முதன்மை நோக்கமாகும்.
அமெரிக்கா செல்ல விரும்பும் வெளிநாட்டினர், குறிப்பாக மருத்துவக் காரணங்களுக்காகச் செல்பவர்கள், தங்களின் பயண நோக்கத்தைத் தெளிவாகவும் உண்மையாகவும் தெரிவிக்க வேண்டும். குடியுரிமை பெறுவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்படும் இத்தகைய பயணங்கள் இனி சட்ட ரீதியான பெரும் சிக்கல்களை உருவாக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications