இரு விஜயபாஸ்கரின் வருகையால் தவெகவில் குழப்பம்.. புலம்ப தொடங்கிய விஜய்யின் விசுவாசிகள்! என்ன நடந்தது?
சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் நாளை மறுநாள் தவெகவில் இணையவுள்ள நிலையில், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்ட தவெக உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியும் கவலையும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவுக்கு வரவுள்ளதையொட்டி ஈசிஆரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களோடு அவர் தவெகவில் இணையவிருப்பதால், புதுக்கோட்டை மாவட்ட தவெகவின் தற்போதைய உள்ளூர் பிரிவினர் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

அதிமுகவினரின் இந்த அசுரத்தனமான வருகை, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் தவெகவின் பலத்தை அதிகரிக்கும் என்பதை உள்ளூர் நிர்வாகிகள் ஒப்புக்கொண்டாலும், தங்களை விட பல மடங்கு எண்ணிக்கையில் வரும் அதிமுகவினர் தங்களை அப்படியே 'விழுங்கிவிடுவார்களோ' என்ற கவலை அவர்களிடம் எழுந்துள்ளது.
நிச்சயமாக விஜயபாஸ்கருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பதவி கொடுக்கப்படும். அப்படி கொடுக்கப்படும் பட்சத்தில் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுக்கு அவருக்கு கீழ் இருக்கும் பொறுப்புகளை கொடுப்பார். இதனால் தவெகவில் நமது உழைப்பு வீணாகிவிடுமோ என்ற கவலை இப்போதே தொடங்கி இருக்கிறது. மாவட்ட அமைச்சர் பர்வேஸ் ஆதரவாளர்களே புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.
ஏனென்றால் அமைச்சரவை மாற்றம் செய்யும் போது பர்வேஸ் பதவி விஜயபாஸ்கர் வசம் செல்லுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் தொண்டர்கள் கூட்டம் பெருமளவில் இல்லாவிட்டாலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வருகை கரூர் தவெக நிர்வாகிகளை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கரையே வேட்பாளராக நிறுத்த தவெக தலைமை திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுவதும் உள்ளூர் நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கட்சி மாறிய ஒருவருக்கும், கட்சியின் உண்மையான விசுவாசிக்குமான போட்டியாக மாறிவிட்டது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் கட்சிக்காக சிறை வரை சென்ற மதியழகன் போன்ற விசுவாசிகள் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் தவெகவில் இணையும் மாற்றுக் கட்சியினருக்கு முன்னுரிமை கொடுப்பது எப்படிச் சரியாகும் என்ற கேள்வியை இப்போதே எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். மாற்றுக்கட்சி சீனியர்களின் வருகையால் ஏற்பட்டுள்ள இந்த உள்ளூர் பூசல்கள் தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications