“வேலை வாங்கி தருகிறேன் என யாரிடமும் பணம் வாங்கவில்லை.. குரல் சோதனைக்கும் தயார்” - சிவசங்கர் பேட்டி
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பாக இன்று விசாரணைக்கு ஆஜரானார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும், குரல் சோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடைபெற்றதாகக் கூறப்படும் பண மோசடி தொடர்பான புகாரில் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதில், ஜூலை 1 ஆம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இன்று நேரில் ஆஜரானார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், "போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக யாரிடமும் பணம் வாங்கவில்லை. விசாரணைக்கு அழைத்ததால் வந்தேன். போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கைது செய்யப்பட்ட இளஞ்செழியனுக்கும் எனக்கும் தொடர்பில்லை. கைது செய்யப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசிய உரையாடல்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.
தொலைபேசி உரையாடலில் உள்ள குரலையும் எனது குரலையும் ஒப்பிடும் சோதனைக்கு நான் தயார். அமைச்சராக இருந்தபோது என்னை சந்திக்க தினமும் 200 முதல் 300 நபர்கள் வருவார்கள். அவர்களுடன் தொடர்புபடுத்தி பேசுவது சரியா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.













Click it and Unblock the Notifications