ரூ. 6 லட்சத்திற்கு ஏலம் போன பலே ஜல்லிக்கட்டு காளை!
ஹைதராபாத்: பல ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு பரிசு வென்ற காளை ரூ. 6 லட்சத்திற்கு ஏலம் போனது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் தன்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ்ராவ். அவர் தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை ஏலத்தில் விட்டார். ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் காளையை வாங்க போட்டிபோட்டனர். இறுதியில் நல்கொண்டா மாவட்டம் மேலச்செரூர் பஞ்சாயத்து தலைவர் வெங்கட்ட ரெட்டி என்பவர் ரூ.6 லட்சத்து 10 ஆயிரத்துக்கு காளையை ஏலத்தில் எடுத்தார்.
காளை மாட்டிற்கு ரூ.6 லட்சமா என்று பலரும் வியக்கலாம். அந்த காளை ஓங்கோல் இனத்தைச் சேர்ந்தது. பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்ட அது 13 போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் 5 முறை 2வது இடத்தையும், 4 முறை 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
காளைக்கு வயதானதால் தான் அது ஏலத்தில் வி்டப்பட்டது. நல்ல காளை என்பதால் அதை வைத்து இனவிருத்தி செய்வதற்காகவே அவ்வளவு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.