சென்னையி்ல் மனைவி கண்முன்பு வியாபாரி வெட்டிக் கொலை: பணம், நகை கொள்ளை
சென்னை: சென்னையில் பாத்திரக் கடை வியாபாரியை வீடு புகுந்து தாக்கி கொலை செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூர் பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் சங்கரபாண்டியன்(56). தூத்துக்குடி மாவட்டம், சித்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அவர் பஜனை கோவில் தெருவில் பாத்திரக்கடை மற்றும் பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு சங்கரபாண்டியனின் வீட்டுக் கதவை 3 வாலிபர்கள் தட்டினர். அவரது மனைவி தங்கம் கதவை திறந்தார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களும் திடீரென வீட்டுக்குள் புகுந்து தங்கத்தின் கையில் கத்தியால் குத்தினர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு சங்கர பாண்டியன் எழுந்து வந்தார். அதற்குள் மர்மநபர்கள் தங்கத்தின் கை, கால்களை கட்டி வாயில் துணியை திணித்தனர். பின்னர் சங்கரபாண்டியனை 3 மர்மநபர்களும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
அதன்பிறகு சங்கரபாண்டியன், அவரது மனைவி உள்ளி்ட்டோர் அணிந்திருந்த நகைகளையும், வீட்டில் இருந்த பணம், வட்டிக்கு கொடுத்தது குறித்த வரவு செலவு கணக்குகளை எழுதி வைத்திருந்த கணக்கு நோட்டு உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பியோடி ஓடிவிட்டனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு கட்டுகளை அவிழ்த்த தங்கம் இது குறித்து தாழும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சங்கரபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தங்கள் வீட்டின் கீழ்பகுதியில் வசித்து வந்த வடமாநில வாலிபர் மீது சந்தேகமுள்ளதாக தங்கம் போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சங்கரபாண்டியனுக்கு மொத்தம் 2 மனைவிகள் இருப்பதும், அதில் தங்கம் 2வது மனைவி என்பதும் தெரிய வந்தது. அவரது முதல் மனைவிக்கு முனீஸ்வரி, லதா என்ற 2 மகள்கள் உள்ளனர். தங்கத்துக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்ற பிறகு, சங்கரபாண்டியனை திருமணம் செய்தது தெரிய வந்தது.
சங்கரபாண்டியனுக்கு 15 வீடுகள் உட்பட பல இடங்களில் சொத்துகள் உள்ளது. அதனால் சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா, தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டரா என்பது உட்பட பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications