சாக்கடையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து 4 பேர் காயம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சாக்கடையில் கிடந்த மர்ம பொருள் ஒன்று வெடித்து துப்புரவு தொழிலாளர்கள் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடைகளை சீரமைக்கும் பணி இன்று காலை நடந்தது. இந்த பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஏராளமானோர் ஈடுபட்டிருந்தனர்.
சாக்கடைக்குள் உள்ள கழிவுகளை தொழிலாளர்கள் அள்ளி அதனை வெளியே எடுத்து போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாக்கடைக்குள் மர்ம பொருள் ஓன்று கிடந்தது. அதனை தொழிலாளர்கள் எடுத்த போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் சாக்கடை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தூத்துக்குடி டிஎம்சி காலனியை சேர்ந்த காளிதாஸ், முகுந்தன், மேல அரசடியை சேர்ந்த சூரியா, அம்பையை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களது முகம் சிதைந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெடித்து சிதறி கிடந்த மர்ம பொருளின் துகள்களை போலீசார் சேகரித்தனர். அதை வைத்து வெடித்த மர்ம பொருள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications