முல்லை பெரியார் பிரச்சனை- வரும் 27ம் தேதி உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம்
தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து தேனியில் வரும் 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி அறிவித்து உள்ளது.
இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளாவில் வாழும் தமிழக மக்களும் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ்ந்து வருகின்றோம். இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இது மேலும் வளர்ந்து கொண்டே சென்றால், காலம் காலத்துக்கு பெரும் பகையாக மாறிவிடும்.
இந்த பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மத்திய வல்லுனர் குழு, ஆய்வாளர்கள், பொறியாளர்கள் என்று பல்வேறு ஆய்வுக் குழுக்கள் வந்து அணையை பார்வையிட்டு, அணை மிகவும் உறுதியாக உள்ளது என்றும், நில அதிர்வுகள் ஏற்பட்டால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.
ஆனால் உறுதியாக இல்லை என்றும், தற்போது அணை உள்ள இடத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்றும் பொய்யான தகவலை கேரள அரசு கூறி வருகிறது. தமிழகத்தில் பல ஆண்டுக்கு முன்பு காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கருங்கற்களாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்டது. அது இன்றும் பாதுகாப்பாக உள்ளது.
இதே மூலப்பொருட்களைக் கொண்டு தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டு உள்ளது என்பதால் யாரும் பயப்பட தேவையில்லை. எனவே அணை உறுதியாக இல்லை என்று பொய்யான பிரசாரத்தை கூறிவரும் கேரள அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வராத மத்திய அரசை கண்டித்தும் டிசம்பர் 27ம் தேதி மதியம் 1 மணிக்கு தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications