அம்பை தாசில்தார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: நெல்லையில் பரபரப்பு
நெல்லை: அம்பாசமுத்திரம் தாசில்தார் நெல்லை அருகே திடீரென ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் தொந்தரவால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாசில்தார் தற்கொலையால் வருவாய் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் தியாகராஜன். நெல்லை பாளை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகங்களில் பட்டா பெயர் மாற்றம், சான்றிதழ் வினியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை நடந்தது. இந்த கூ்ட்டத்தில் கலந்து கொள்ள தாசில்தார் தியாகராஜன் அம்பையில் இருந்து தனது ஜீப்பில் புறப்பட்டு சென்றார். காலை 10 மணிக்கு நெல்லை வந்த அவர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காமல் தனது அரசு அலுவலக சிம் கார்டையும், ஜீப்பையும் டிரைவரிடம் ஒப்படைத்துவிட்டு நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இறங்கிக் கொண்டார். அதன் பின்னர் தியாகராஜனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது சொந்த செல்போனை தொடர்பு கொண்டபோதும் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
நெல்லை என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள அவரது வீட்டு தொலைபேசியிலும் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது அங்கும் தாசில்தார் தியாகராஜன் செல்லவில்லை என்பது தெரிய வந்தது. அவர் மாயமானது நெல்லை கலெக்டர் அலுவலக வட்டாரத்திலும், அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று காலையிலும் இந்த பரபரப்பு தொடர்ந்தது.
இந்நிலையில் நெல்லை-கோவில்பட்டி இடையேயான ரயில் பாதையில் தச்சநல்லூர் அருகே அழகநேரியில் தியாராஜனின் உடல் நேற்று காலை 11 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. கால்கள் துண்டாகி முகம் சிதைந்து காணப்பட்டது. அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. நெல்லை ரயில்வே போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாசில்தார் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
தமிழக நில நிர்வாக ஆணையர் ஸ்வரன்சிங் கடந்த 16ம் தேதி நெல்லை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அம்பை தாலுகாவில் பல்வேறு பணிகள் தாமதம் தொடர்பாக கலெக்டரிடம் ஸ்வரன்சிங் புகார் செய்துள்ளார். இதை தொடர்ந்து நெல்லை கலெக்டர் செல்வராஜ், தாசில்தார் தியாகராஜனை கண்டித்தாராம். அம்பை தாலுகாவில் நில ஆவணங்கள், பட்டா பெயர் மாற்றம், சான்றிதழ்கள் வழங்கியது தொடர்பான ஆவணங்களை ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. உயர் அதிகாரிகள் டார்ச்சரால் மன உளைச்சலுக்கு ஆளான தியாராஜன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.